செவ்வாய், 29 அக்டோபர், 2013

உறவு பசித்த நேரம்

வானத்தில் மேகக்கூட்டம் ஓடுவதை போல அந்த நகரத்தில் எல்லாரும் ஓடிக்கொண்டிருந்தனர். சிலர் காலாலும் சிலர் வாகனத்திலும். மெயின் ரோட்டில் இருந்து சற்று விலகி இருந்தது அந்த தெரு. உடலில் காய்ச்சல் வந்தால் எப்படி உடம்பு முழுக்க சூடாகுமோ, அதே போல நகரத்தின் பரபரப்பு அந்த தெருவிலும் இருந்தது. அறுபதுகளில் கட்டிய வீடுகள். காம்பவுண்ட்  சுவர் வைத்து தோட்டத்திற்கு இடம் விட்டு கட்டிய வீடுகள் இன்றைக்கு அரசு அலுவலங்கலாக காட்சி அளித்துகொண்டிருதது. அந்த தபால் நிலையத்தின் முன் வாசல் தட்டி வைத்து அடைக்கப்பட்டிருந்தது. பக்க ஜன்னல்களில் மணி ஆர்டர் செய்வதிர்ற்கு, தபால் கவர் வாங்குவதற்கும் மனிதர்கள் வரிசையில் நின்றிருந்தனர். தெருவில் சிலர் தங்களது வாகனத்தை நிறுத்த இடம் தேடிக்கொண்டு இருந்தனர். கிடைத்த இடங்களில் எல்லாம் இரு சக்கர வாகனங்கள் நிரம்பிருந்தன.

பிரசாத் அங்கே கிடைத்த சிறு இடைவெளியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அருகிலிருக்கும் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்றான். அன்று மாதக்கடைசி. அப்பாவிற்கு சம்பளம் அக்கௌன்டில் வரவு வைக்க பட்டிருக்கும். சீக்கிரம் எடுத்து போய் அவரிடம் குடுத்து, சில வீட்டு செலவுகளையும் முடிக்க வேண்டும்.

பிரசாத் ஒரு முதுகலை பட்டதாரி. ஆராய்ச்சியில் ஆர்வம் இருந்ததால் பிஹச்டி செய்வதற்காக பல நாட்டில் பல இடங்களில் அப்ளை செய்துவிட்டு முடிவிற்காக காத்து கொண்டிருப்பவன். அப்பா அம்மா இருக்கும் வீடு சற்று கிராம புறத்தில் இருந்ததினால், இவனுக்கும் தொடர் மின்சாரம் மற்றும் இனையதள சேவை தேவை என்பதால் அந்த நகரத்தில் தனது சித்தி வீட்டில் தங்கி இருந்தான். வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவனை விட வேலைக்கு அப்ளை செய்து விட்டு முடிவிற்காக காத்து கொண்டிருப்பவனின் நிலைமை பயங்கர கொடியது. வேலைக்காரனை சில வேலைகள் சொன்னால் டிப்ஸ் குடுக்க வேண்டி இருக்கும் என்பதால் வீட்டில் இருப்பவர்கள் பிரசாத்தை எல்லா வேலையும் செய்ய பணித்திருந்தனர்.

வீட்டில் மளிகை சாமான் வாங்குவது, போஸ்ட் ஆபிஸ் செல்வது, கரண்ட் பில் கட்டுவது, என அணைத்து வேலைகளும் அவன் மேல தான். சில நேரங்களில் சித்தி பசங்க வீட்டில் இருப்பவர்களிடம் எதாவது கேட்டால், அண்ணா சும்மா தான் இருக்கான் அவன் கிட்டே போய் கேளுன்னு சொல்லி விடுவார்கள். பிரசாத் சிரித்து கொண்டு பசங்களுக்கு தேவையானதை செய்து குடுப்பான்.

பிரசாத்தின் தற்பொழுது பொழுதுபோக்கு பாட்டு கேட்பது. சில நேரங்களில் அடக்க முடியாத கோவம் வரும்போது, ஹெட் செட்டை காதில் மாட்டிக்கொண்டு தனது இருசக்கர வானகத்தில் எங்கயாவது சென்று விட்டு திரும்புவான். காதில் பாட்டுக்களின் ரீங்காரம், வேகமாக வலது புறம் வரும் வாகனங்கள், எதோ பூச்சாண்டி வருவது போல இருப்பக்கமும் பார்க்காமல் ரோட்டை கடக்கும் மக்கள், சிக்னல்கள் அனைத்தையும் தாண்டிய பின் தூரத்தில் ஒரு ஹோட்டல், அங்கே சென்று ஒரு ப்ளேட் பனீர் 65 சாப்பிட்டு திரும்பும் போது அனைத்து கோவமும் கரைந்திருக்கும். அன்றும் தனது இருசக்கர வாகனத்தில் அப்படி வந்து நிறுத்தி வரிசையில் நின்று கொண்டிருந்தான்.


“ச்சே அதுக்கு புரியவே மாட்டேங்குது, சரியான தொல்லையா போச்சு, வீட்ட விட்டு தொலஞ்சு போனா என்ன? என்ன மயித்துக்கு இங்க வந்து உக்காந்துகிட்டு என்னோட தாலி அறுக்குது...” சற்று உரக்க தனது அம்மா காது படவே கத்தினான் அவன்.
“கத்தாதீங்க, அத்தைக்கு கேட்ற போகுது”
“நல்லா கேக்கட்டுமே, இன்னும் ரெண்டு பேரு இருக்காங்கல்ல அண்ணன் தம்பிங்க, அவங்க வீட்டுக்கு போக வேண்டியது தானே, நான் தானா கிடைச்சேன்”
“மருந்து செலவுன்னு என்னோட பாதி சம்பளம் அதுக்கே செலவளிக்கிறேன்”
“ஏங்க இப்பிடி கத்தாதீங்க.. அத்தை எங்கயாவது போய்ட போறாங்க”
“போகட்டும் போடி...”
தினமும் இதே வார்த்தைகள் தான். மூணு பிள்ளைங்க. புருஷன் செத்துப்போன பின்னாடி அவங்க வீட்டுல போய் இருக்கலாம்னு எல்லாருடைய வீட்டுக்கும் போயாச்சு. எல்லா வீட்டிலேயும் இதே வசவுகள் தான். சகித்துக்கொண்டு தான் பேரன்களோடு பேசி கொண்டிருக்கிற சுகம் மட்டும் தான் அவளுக்கு. இன்றைக்கு அளவுக்கு மீறி போய்க்கொண்டிருக்கிறது.

இரவு தூக்கமே வரவில்லை. அந்த குழி விழுந்த கண்களின் இருபுறமும் நீர் வழிந்து கொண்டிருந்தது. வானத்தின் உள்ள நட்சத்திரங்கள் சிறு குழந்தையுடன் ஒளிந்து கொண்டு விளையாடுவது போல அவ்வப்போது மேகத்தின் உள்ளே சென்று வந்தது. சிமெண்ட் திண்ணை, வலது புறம் வீட்டின் சுவர், இடது புறம் சிறு தோட்டம், புடவையை மடித்து தலையணை,  சிறு சிறு பூச்சிகளும் வண்டுகளும் தான் தற்பொழுது நண்பர்கள் அவளுக்கு. அந்த வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் காதினுள் ஒலித்துகொண்டே தான் இருந்தது.

சூரியன் தனது செங்கரங்களை விரித்து கொண்டிருந்தான். பறவைகளின் சப்தங்கள், தூரத்தில் நாய் குலைக்கும் சப்தம், இதை எல்லாம் கேட்டுக்கொண்டு மனதில் ஆவேசம் வந்தது போல நடந்து கொண்டிருந்தாள். நீள்வட்டமான முகம், அறுபது சதவிகிதம் நரைத்த முடி, கண்களின் பக்கம் மட்டும் உள்ள சுருக்கம், இடது கன்னத்தில் கண்ணுக்கு கீழே ஒரு உருண்டையான மச்சம், வெள்ளை நிறத் தோல், கழுத்தில் நெறைய நாட்கள் நகைகள் அணிதிருந்ததால் உண்டான தோளின் கருமை, வெளிர் மஞ்சள் நிற புடவை, இடது கையில் கருப்பு கயறு, செருப்பு போடாத கால்கள், வேகமாக ஒன்றின் பின் ஒன்றாக எடுத்து வைத்து நடந்து கொண்டிருந்தாள்.


“சார், ஏன் சார் நடுவுல வரீங்க, நாங்க தான் லைன் ல நிக்கிரோம்ல” வரிசையின் நடுவில் செல்ல முயன்றவரை பார்த்து கத்தினான் பிரசாத்.
“சார் இல்ல சார், பாப்பா ஆஸ்பத்திரில இருக்கு சார், சீக்கிரம் போகணும் சார் ப்ளீஸ்”
“சரி போங்க சீக்கிரம் போங்க, சார் அவரு முதல்ல போகட்டும் சார், மேடம் ப்ளீஸ் கேன் யூ அல்லோ ஹிம் டு கோ பர்ஸ்ட்”
“ரொம்ப தேங்க்ஸ் சார்”

மறுபடியும் வரிசையில் அதே இடத்தில வந்து நின்றான். காதில் அதே பாட்டு. அவனை தாண்டி செல்பவர்கள் எல்லாம் தன் பின்னால் எதையோ பார்த்துகொண்டிருப்பது போன்று தோன்றியது. சட்டென்று திரும்பி பார்த்தான். அவள் எதிரே இருந்த மஞ்சள் சுவற்றின் முன்னே அமர்திருந்தாள். பழுப்பேறிய மஞ்சள் நிற புடவை. ஆடைகள் விலகி இருந்தன, அதை தான் எல்லோரும் பார்த்துகொண்டிருந்தனர். பல நாட்கள் குளிக்காததினால் தோலின் மீது கருமை நிறம் ஏறி இருந்தது. முகத்தில் சோர்வு, சுருக்கம் அதிகமாகி இருந்தது. நடந்து நடந்து கால்கள் காய்ச்சி போய் இருந்தன.


பார்த்தவுடனே பிரசாத் வேகமாகே அவள் அருகே சென்றான். ஆடைகளை சரி செய்தான். பாக்கெட்டில் வைத்திருந்த பத்து ரூபாய் எடுத்து அவளிடம் நீட்டினான். தரையையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். எந்த சலனமும் அவளிடத்தில் இல்லை. அவனை நிமிர்த்து கூட பார்கவில்லை அவள். அருகே அவன் அமர்ந்து மீண்டும் அவளிடம் பணத்தை நீட்டினான். அவளது கண்கள் சற்று இவன் பக்கம் திரும்பியது.

“இந்தாங்க மா வச்சுகுங்க”
“வேண்டாம் பா”
“பரவாலீங்க மா, வச்சுக்குங்க”
“இல்ல பா காசு வேண்டாம்”
“காசு வேண்டாம்னா வேற என்ன வேணும் மா”
“ரொம்ப பசிக்குது பா, ரெண்டு இட்லி வாங்கி தரியா” தயக்கத்தில் குரல் நடுங்கியது..

பக்கத்திலிருக்கும் மெஸ்சில் இரு இட்லிகள் வாங்கி வந்தான் அவன். பார்சலை பிரித்து சாம்பாரை இட்லி மீது ஊற்றி அவளிடம் குடுத்தான். அவளிடம் குடுத்து விட்டு அருகே இருக்கும் கல்லின் மீது அமர்ந்து கொண்டான். மிகவும் நிதானமாக இட்லியின் மீது கைவைத்தால் அவள். கண்கள் குளமாக தொடங்கி இருந்தது.

“சாப்ட்டு ரெண்டு நாள் ஆச்சு பா”
“சரிங்க பேசாம சாப்டுங்க”

இட்லிகளை சாப்பிட்டு விட்டு விரல்களை நன்றாக நாவால் சுத்தப்படுத்தினாள். நகங்களின் நடுவே மணல் கருமையாக காட்சியளித்தது. மீதி இருந்ததை புடவையின் மீது துடைத்தாள்.

“என்ன ம்மா நல்லா சாப்டீங்களா”
“சாப்டேன் பா”
“ரொம்ப நன்றி பா, எனக்கு மூணு பசங்க இருக்காங்க, நா சாப்டும்போது யாருமே வந்து என் பக்கத்துல வந்து உக்காந்ததே இல்ல...”
“எனக்குன்னு ஒரு தட்டுல சாப்பாட்ட போட்டு என் முன்னாடி வச்சுட்டு போய்டுவாங்க, ஒருவேளை தான், அதை தான் நா ரெண்டு வேளைக்கும் வச்சு சாப்டனும்”
“அவங்கள என்னத்துக்கு குத்தம் சொல்லணும், அவனவனுக்கு அவன் குடும்பம், நா பாரமாகிட்டேன்”

பிரசாத் ஒன்னும் சொல்லாமல் இருந்தான். அவன் கண்களில் கண்ணீர் அந்த நொடி வந்துவிடும் என்பது போல இருந்தது. அவனது நிலைமை அடுத்த கேள்விகளை கேட்க விடாமல் தடுத்தது.
“ரெண்டு மாசம் ஆச்சு பா, ஒரு அம்மாவுக்கு என்ன வேணும், சொத்தா கேக்குறோம், அரவணைப்புக்கு ஒரு உறவு, பசிக்கு சாப்பாடு, அவங்களால அது முடியல”
“நீங்க எங்க மா தங்கி இருக்கீங்க”
“இல்ல பா, வேண்டாம்... ரொம்ப நாளைக்கு அப்பறம் என்னோட மனசு நிறைஞ்சிருக்கு, நீ நல்லா இருக்கணும்”
வேகம்மாக சுவரை புடித்து எழுந்தால் அவள், ரெண்டு அடி எடுத்து வைத்து திரும்பினாள், கண்கள் கூர்மையாகி இருந்தன.


“இனிமே வாழ்கையிலே உன்ன பாக்கவே கூடாது ப்பா”

திரும்பி பார்க்காமல் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தாள்.

திங்கள், 21 அக்டோபர், 2013

பச்சை நரம்பு (சிறுகதை)

தடக்.. தடக்...
ரயிலின் ஓசை சீராக கேட்டு கொண்டிருந்தது. ஆறடி உயரம், மெலிந்த ஆனால் வலிமையான உடல், அழுத்தமான பார்வை எல்லாம் அவனை ஒரு பயிற்சியில் உள்ள போலீஸ்காரன் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. சற்றே அழுக்கேறிய இளம்பச்சை சட்டையும், பழுப்பாக ஒரு நீல ஜீன்சும் அணிந்திருந்தான். கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது. கழிவறைக்கு அருகே இருக்கை இருந்ததினால் மூத்திர வாடை, அங்கேயும் ஐந்து பேர் நின்றிருந்தனர்.
அவன் உருவத்திற்கு உட்காந்திருந்த இருக்கையில் இரண்டு பேர் அமரலாம். அவன் தோற்றத்தை பார்த்த உடனே விலகி சென்றனர். முன்னே கைகுழந்தையுடன் அமர்ந்திருந்த முதியவரை பார்த்து ஒரு புன்னகை செய்தார். வலது பக்கத்தில் உள்ள இருக்கையில் வடஇந்தியர்கள். சிறிது கூட இடைவெளி இல்லாமல் பேசிக்கொண்டிருந்தனர். ஒருவர் பேசுவதை மற்றொருவர் கவனிப்பதாகவே தெரியவில்லை. அவர்களுக்கு நடுவே ஒரு ரோஜாப்பூ நிறத்தில் உடையணிந்த குழந்தை, எதோ தனக்கு தெரிந்த பாஷையில் கையை ஆட்டி தனியே பேசிக்கொண்டிருந்தது. மேலே கால்களை பார்க்கும்பொழுது பன்னிரண்டு பேர் அமர்ந்திருப்பது போல இருந்தது.
“சுண்டல் வாங்கலையோ!! சுண்டல்.. சூடான சுண்டல்...”
“சாம்....சா... சூடான சாம்.....சா வடேய்.....”
“வணக்கம் சின்னகருப்பன் சார்... சுண்டல் சாப்டுங்க சார்... “
சுண்டல்காரனை பார்த்தான்.
“இல்ல சார், பொண்ணு பேர் இருந்துச்சுன்னா தான் அம்மா பேரா பொண்டாட்டி பேரா இல்ல கொழந்தை பேரான்னு கொழப்பம் வரும். ஆம்பள பேரு இல்ல அதான் உங்க பேரா தான் இருக்கணும்னு கூப்பிட்டேன்.”
கையை நிமிர்த்தி அதில் “சின்னகருப்பன்”னு பச்சை குத்தியிருப்பதை பார்த்தான்.
“சரி ஐஞ்சு ரூபாய்க்கு குடு”
“சுண்டல் வாங்கலயோ சுண்டல்...”
சில்லறை தரும் இடைவெளியில் நான்கு முறை ‘கூவி’னான்.
சுண்டல் சுருட்டிய காகிதத்தின் அடிக்கூம்பை இடது கையால் புடித்து, ஒவ்வொரு சுண்டலாக வாயில் போட ஆரம்பித்தான்.
.
.
இலந்தைபழம், கருமையாக லேகியம் போலவே இருக்கும். எடுத்து வாயில் வைக்கும் போது சூர்ர்ர்..ன்னு இழுக்கும். முன்னால் அது இரயில் நிலையத்தின் அருகே உள்ள பெட்டிகடையில் தான் கிடைக்கும். ஊருக்குள் கிடைக்காது. அதற்க்காகவே மாலை வேளையில், பள்ளி முடிந்தவுடன் சில மாணவர்கள் கூட்டமாக சேர்ந்து இலந்தைப்பழம் சாப்பிட கிளம்புவார்கள். வாங்கி அப்படியே நிலையதிற்க்குள்ளே சென்று வருகின்ற இரயிலுக்கு “டாட்டா” காமிக்கும் படலம். ஒருவர் திருப்பி டாட்டா காமித்துவிட்டாலும் அன்று முழுக்க அவர்களுக்குள்ளே சண்டை வரும், யாருக்கு டாட்டா காமித்தான் என்று.
.
அன்றும் அப்படித்தான். டாட்டா காட்டலாம்னு உள்ளே சென்றேன். ஆனால் இரயில் நின்றுகொண்டிருந்தது. நிறைய பேர் நடைமேடையில் நின்றிருந்தனர். இலந்தைபழத்தை சப்பிக்கொன்றே உள்ளே சென்றேன். வெள்ளையாக நீளமான சட்டையும், நீளமான டவுசரும் அணிந்திருந்தார்கள். கிட்டத்தட்ட அனைவருமே சிகரெட் புடித்தனர். அவர்களை வேடிக்கை பார்க்க வேகமாக ஓடினோம்.
எங்களை பார்த்ததும் ஒருத்தன் கத்தினான்
“ஹே சோட்டூ, இதர் ஆ”
என்ன சொன்னான் என்று புரியவில்லை ஆனால் சைகையை வைத்து அருகே சென்றேன்.
“துமாரா நாம் க்யா”
“புரியல னே”, இப்பொழுது எனக்கு பாஷை புரியலன்னு என்னோட சைகை அவனுக்கு காட்டி கொடுத்திருக்கும்.
“நாம்.. நாம்..  பே.. ரூ”
“பேரா னே, சின்னகருப்பன்”
“ஹா ஹா தும் சின்ன ஹா ஹா...”
அவன் வாயில் பெயர் நுழையவில்லை.
“துமாரா கர் கஹா”
“சத்திமா புரில னா”
“அச்சா அச்சா.. இஸ் சாஹியே க்யா?”
கையில் சூட மிட்டாய் போன்று எதோ இருந்தது. சூட மிட்டாய் என்று நினைத்து வாயில் போட்டு விட்டேன். முதலில் நன்றாக இனிப்பாக இருந்தது. சப்ப சப்ப என் முன்னே இருந்தவர்கள் ரெண்டு ரெண்டாக தெரிய ஆரம்பித்தனர். கூட வந்த நண்பர்களை கூப்பிடலாம்னு திரும்பிபார்த்தேன். அவர்கள் தூரத்தில் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் எல்லாரிடமும் பேச்சு கொடுத்துக்கொண்டே அழைத்து சென்றுவிட்டான். அப்படியே இருட்டாரம்பித்தது.
.
.
.
சிறிது சிறிதாக கண்களை திறந்தேன். உடம்பே வலித்தது. வானத்தில் திரியும் மேகங்கள் திரண்டு கீழே இருப்பது போன்று ஒரு வெளிச்சம்.  மறுபடியும் வெள்ளையாக உருவங்கள். கண்களை கசக்கிக்கொண்டு மறுபடியும் பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை.
அரைமணி நேரத்தில் டாக்டர் வந்தார்.
“தம்பீ, தம்பீ”
“ம்ம்”
“நான் பேசுறது கேக்குதா”
“ம்ம்”
“பேரு என்ன தம்பீ”
“சின்னகருப்பன்”
“வெரி குட், எந்த ஊரு”
“அது அது தெக்கால இருக்குற அந்த கூட்டு ரோட்ல ஒரு ஆலமரம் இருக்கொம் சார் அத தாண்டினா என் ஊரு வரும் சார்”
“ஊர் பேரு தம்பீ”
“அது.. அது.. தெரில சார்”
“என்ன தம்பீ படிக்குற”
“கவர்மெண்டு பள்ளிக்கூடத்தில ரெண்டாம் வகுப்பு படிக்கிறேண் சார்”
மேலும் சில கேள்விகள், எனக்கு பெயர்கள் எதுவுமே நினைவில் இல்லை. ஒரு வாரம் முழுக்க யோசித்திருப்பேன். நினைவில் வரவே இல்லை. அந்த இடமே எனக்கு புதிதாய் இருந்தது. அழுக்கேறிய மெத்தைகள், சுவர்கள், துருப்பிடித்த கட்டில்கள். கடந்த ஆறு மாதமாக கோமாவில் இருந்திருக்கிறேன். விழுப்புரம் இரயில் நிலையத்தில் ஒருநாள் முழுக்க கிடந்திருக்கிறேன். முதலில் தூங்கிகொண்டு இருக்கிறேன்னு நினைத்தவர்கள், ஒரு நாள் முழுக்க இடம்மாராமல் படுத்துகிடந்தினால், போலீஸ் மருத்துவமனையில் சேர்த்தது, முதலில் உடைகளை பார்த்து வடக்கத்தியவன் என்று நினைத்தவர்கள், கையில் இருக்கும் பெயரை பார்த்தவுடன் தான் தமிழ் என்று தெரிய வந்திருக்கிறது. என்னுடைய பெயர் தவிர வேறெந்த பெயருமே ஞாபகம் இல்லை.
.
.
ஆலமரம், நன்றாக வளர்ந்து விரிந்து பார்ப்பதற்கு மயிர் முளைத்த கிலுகிலுப்பை மாதிரியே இருக்கும். விழுதுகளை புடித்து தொங்கி விளையாடுவோம். பிறகு பக்கத்தில் இருக்கும் ஊருணியில் தண்ணீர் குடித்து விட்டு, நடக்க ஆரம்பிப்போம். வெளிர் பச்சை நிறத்திலிருக்கும் செடிகள், கப்பி ரோட்டில் நடக்க ஆரம்பித்து சுமார் ஏழு பாட்டுக்கள் பாடிய பின் சிறு குன்றொன்று வரும். படி மீது ஏறி போனால் ஒரு கோவில். சற்றே பழைய கோவில். வெளிப்புற சுவற்றில் செம்மண்ணும் சுண்ணாம்பும் வரி வரியாக இருக்கும். அப்படியே சாமிக்கு ஒரு டாட்டா காட்டிவிட்டு மறுபுறம் எறங்கி செல்லும் பொழுது என்னுடைய வீடு வரும். எல்லாம் ஞாபகம் இருக்கிறது ஆனால் பெயர்...

இரயில் நின்றது. நிலையத்தின் பெயரை எட்டி பார்த்தேன், பொன்மலை. சிக்னலுக்காக நிறுத்தி இருந்தார்கள். என்னோட ஊருக்கு பக்கத்துல இருக்கிற ஸ்டேஷனும் இப்படிதான் இருக்கும். நடைமேடை முழுக்க மரங்கள். ஆள் அரவமற்ற இரயில் நிலையம். ஆனா ஒரே நடைமேடை தான். கண்களை மூடினேன்.

“டேய், எந்திரிடா... சாப்டு படு”
“போமா தூக்கம் வருது... விடு”, மறுபடி படுத்து விடுவேன்.
அம்மா விடமாட்டார்கள். சாதத்தில் புளிகுழம்பை ஊற்றி, நன்றாக பிசஞ்சு, ஒரு உருண்டையாக உருட்டி, கையில் வைப்பார்கள். நடுவில் ஒரு குழியிட்டு அன்று செய்த வெஞ்சனத்தை உள்ளே வைத்து மூடி விடுவார்கள். அதை அப்படியே சிறிது சிறிதாக சாப்பிடுவேன். அவ்வளவ்வு சுவையாக இருக்கும். சாப்பிட்டு கொண்டே இருப்பேன்.
அப்பா இல்லை. தம்பி ஒருவன். அப்பொழுது அவன் பள்ளிக்கு செல்லும் வயதாகவில்லை. பெரிய வீடு இல்லை. சிறிய காரை வீடு தான். வெளிக்கதவை திறந்தால் முதலில் அடுப்படி, வலது புறம் ஒரு சிறிய வெளி, பிறகு ஒரு கதவு, உள்ளே முத்தம், வலது புறம் இரு அறைகள், பச்சை நிற சுவர், செம்மண் நிற தரை, கொல்லையில் சிறிதாக ஒரு தோட்டம். பள்ளி விடுமுறை நாட்களில், காலையில் தோட்டத்தில் தான் குளிப்போம். மாலை நேரத்தில், அரளி, மல்லிகை, மனோரஞ்சித பூ வாசம் வரும். மாலை மங்கும் நேரத்தில், இரவு வரப்போகும் நேரத்தில், இருள் வந்து வராமல் இருக்கும் நேரத்தில், அந்த மல்லிகை பூவை அப்படியே பார்த்துக்கொண்டு பல நாள் இருந்திருக்கேன். இரவில் மல்லிகை மொட்டாக இருக்கும். காலையில் பார்த்தல் மலர்ந்து இருக்கும். பல நாள் மாலை முழுவதும் அந்த மல்லிகை மொட்டு எப்படி மலருகிறது என்று பார்த்துக்கொண்டே இருப்பேன். அப்படியே தூங்கி விடுவேன். காலையில் எழுந்து பார்த்தால் படுக்கையில் இருப்பேன்.
.
.
“ஜெல் பென், பால் பாயிண்ட் பென் பத்து ருப்பை...”
“ஜெல் பென், பால் பாயிண்ட் பென் பத்து ருப்பை...”
கண்களை திறந்தேன். முன்னே கண் தெரியாத மாற்று திறனாளி.
“சார், நில்லுங்க, எனக்கு ஒன்னு குடுங்க”
“தேங்க்ஸ் சார், எது சார், ஜெல் பென்னா சார்”
“ஆமா, ஒன்னு குடுங்க”
பேனாவை எடுத்து பைக்குள்ளே வைத்தேன். உள்ளே அது மாதிரி பதினோரு பேனாக்கள் இருந்தன. நான் இருந்த ஆசிரமத்திற்கு செல்லும் பொழுது அங்க தற்பொழுது இருக்கிற குழந்தைகளுக்கு கொடுத்து விடுவேன். எதோ உழைகிறவருக்கும் மரியாதை, சகோதரர்களின் தேவைகளும் குறையும். மறுபடியும் கண்கள் மூடியது.
.
அந்த ஊசி போட்ட நர்ஸ் எனக்கு புடிக்கல, ஓடி வந்துட்டேன்.
“னே, பசிக்குது னே.. எதாவது குடு னே..”,
“கா, பசிக்குது கா, குடுக்கா”
வர வழில எல்லாரிடமும் கேப்பேன். எவனாவது காசு குடுப்பான், சில பேர் மிச்ச சாப்பாடு குடுப்பான். அப்படியே விழுப்புரம் இரயில் நிலையத்திற்கு எப்படியோ வந்து விட்டேன். அங்கேயே மூன்று மாதங்கள். இரயில்ல ஏறி பிச்சை எடுக்கிறது, நடைமேடை பெஞ்ச்ல தூங்கறது, போலீஸ் வந்தா ஓடிபோய்விட்டு, அவர்கள் சென்ற பின் வந்து படுத்துக்கொள்வேன். ஒருநாள், தூங்கும்போது போலீஸ் புடித்து விட்டார்கள், பக்கத்துல இருக்கிற ஆசிரமத்தில சேர்த்து விட்டார்கள். ஆசிரமத்துல சாப்பாடு போட்டு படிக்க வைத்தார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவுடன், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் போலீஸ் தேர்வு. கான்ஸ்டபிளாக தேர்வு செய்யப்பட்டேன்.
.
.
அன்று டுட்டி சேரும் முதல் நாள். எல்லாரும் டி. எஸ். பி. ஆபிசுக்கு சென்றோம்.
எல்லாரும் சால்யுட் அடித்தோம்.
“வெல்கம், உங்க நேம் சொல்லி இன்ட்றோ குடுங்க, அப்படியே அப்பா அம்மா பேரு எந்த ஊருன்னும் சொல்லுங்க”
“பேரு ஐயப்பன் சார், அப்பா – சரவணன், அம்மா – சீதா, ஊரு கடலூர்”
ஒவ்வொருவராக தன்னைப்பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார்கள். என் முறை.
“பேரு சின்னகருப்பன், அப்பா – லேட் சொக்கலிங்கம்; அம்மா பேரு – சிகப்பி”, பெயர்கள் ஆசிரமத்தில் எட்டாவது படிக்கும் பொழுது ஞாபகம் வந்தது. ஊர் பெயர் தான் எனக்கு எவ்வளவவு யோசிச்சாலும் ஞாபகம் வரவில்லை.
“ஊரு பெயர் சொல்லு தம்பி”
“இல்ல சார், ஊர் பேர் தெரியாது சார்”
“அப்ப எங்க படிச்ச”
“இங்க ஆசிரமத்துல சார்”
“யாரும் தேடிவர்லையா”
“இல்ல சார்”
“நீ தேடலியா”
“எனக்கு ஊர் பேரே தெரியாது சார், எங்க சார் தேடுவேன்”
“யோவ், நீ போலீஸ்யா, நீ இப்படி சொல்லலாமாயா, இனிமே போய் தேடு, என்ன?”
மிகவும் சுலபமாக சொல்லி விட்டார், எனக்கு இதுநாள் வரைக்கும் தோணவே இல்ல. அன்றிலிருந்து தினமும் கம்ப்யூட்டர்ல பழைய காணமல் போனவர்கள் பட்டியல் எல்லாமே தேடுவேன்...
.
பையன் காணவில்லை என்றவுடன், சிகப்பிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, இரவு முழுவதும் எல்லாருடைய வீட்டிற்க்கும் சென்றதேடினாள். அடுத்த நாள் பள்ளி செல்லும் பாதை முழுக்க தேடல். பிறகு சித்தப்பாவும் அவங்களும் போலீஸ்ல புகார் குடுத்து இருக்காங்க. சிகப்பி ஸ்டேஷன்குள்ளே செல்லவில்லை, சித்தப்பா தான் புகார் குடுத்து எல்லாவேலையும் செஞ்சது.
வரிசையாக பெயர்கள் போய்க்கொண்டே இருந்தது. சந்திரன், வெள்ளைச்சாமி,.. சின்னத்தம்பி, மேரி,..
“சின்னத்தம்பி!!”,

சித்தப்பா என்னை அப்படிதான் கூப்பிடுவார்கள்.
“சின்னத்தம்பி என்ன செய்றீக?”
“சித்தப்பா என்னைய சின்னதம்பின்னு கூப்டீகன்னா என் தம்பிய எப்டி கூப்டுவீக”,
“அது அப்ப பாத்துக்கலாம் அப்பு”
“நான் போறேன்.. டர்..... டர்.....” வாயால ஸ்கூட்டரை ஒட்டி விளையாட ஓடிவிடுவேன். 
நம்ப முடியவில்லை, இதுவாக இருக்குமோ, உள்ளங்கை வியர்க்க ஆரம்பித்தது, நாக்கு வறண்டு மேல் தாடையோடு ஒட்டியது. கடவுளே இது என்னோடதா இருக்கட்டும். கால்கள் நிலைகொள்ளாமல் நாற்காலியிலே ஓட ஆரம்பித்தது. ஒவ்வொரு நொடியும் கூட்ஸ் வண்டி போல ஊர்ந்து சென்றது.

அந்த தகவல்களை எடுத்தேன்.
அப்பா பெயர் சொக்கலிங்கம்,
அம்மா பெயர் சிகப்பி, 
அடையாளம் வலது கையில் பெயர் பச்சை குத்தப்படிருக்கும்.

ஊர் பெயர்.... 


அங்கேதான் சென்று கொண்டிருக்கிறேன். இரயில் நிலையத்தில் நின்றது. கோட்டையூர் – எந்த ரயில் நிலையத்தில் தொலைந்தேனோ அதே நிலையம். புதிதாக கட்டடம் கட்டி இருந்தார்கள். மரங்கள் எல்லாம் நன்றாக வளர்ந்திருந்தன. பத்து பேர் இறங்கி இருப்போம். வெளியே வந்தேன், பழைய இடத்தில் பொட்டிக்கடை இல்லை. சற்று தள்ளி போய் இலந்தைப்பழம் வாங்கினேன். அம்மாவுக்கு புடித்த மாவுருன்டையும், ரிப்பன் பக்கோடாவும் வாங்கி வைத்திருக்கிறேன். நடத்து போகும் பொழுது அதே ஆலமரம், இன்னும் வளர்ந்து பெரியதாகி இருந்தது. பாடிக்கொண்டே நடந்தேன். இருபது நிமிடம் கழிந்திருக்கும். அந்த தகவல் பலகையை பார்த்தவுடன் மெலிதான ஒரு புன்னகை.

“ஒ. சிறுவயல் உங்களை அன்போடு வரவேற்கிறது”.


திங்கள், 14 அக்டோபர், 2013

மாரடைப்பு - 4

மாரடைப்பில் எப்படி புரதம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறதோ அதே மாதிரி உறைந்த இரத்தத்தை உடைப்பதற்கு நொதிகள் (enzymes) ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது. நம் எல்லாருடைய உடம்பிலும் இந்த நொதிகள் இருக்கும். சாதாரணமாகவே நமது உடம்பில் அடிக்கடி இரத்தம் உறைந்து போவதற்கு வாய்ப்புகள் உண்டு. என்னதான் பெரிய கம்பெனியானாலும் 1000000 பொருட்கள் உற்பத்தி செய்யும் பொழுது ஒன்றிரண்டு பொருட்கள் குறைபாட்டோடு உற்பத்தி செய்யப்படும். அதே மாதிரி, நமது உடம்பிலும் அதே மாதிரி திடீரென்று சிறு சிறு குறைபாடுகள் தோன்றும். ஆக்ஸிஜென் இல்லாமல் தானாகவே இரத்தம் உறைந்து கொள்ளும். இல்லேயேல் உள்காயம் ஏற்பட்டு இரத்தக்கட்டு ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் உண்டு. இதற்க்கு தான் பரிணாம வளர்ச்சியின் மூலமாக மனித உடம்பு அங்கங்கே சோதனைச்சாவடிகளை அமைத்துள்ளது. முதலில் எங்கேயும் தவறுதலாக இரத்தம் உறையாது. முக்கியமாக ஆக்ஸிஜென் தேவை. அது போக துரோம்பின், பாக்டர் 8, போன்ற புரதங்கள் மற்றும் நொதிகள் தேவை. இதை தாண்டியும் இரத்தம் உறைந்து விட்டது என்றால் அதை கரைக்கவும் நொதிகள் உற்பத்தியாகிவிடும்.

இந்த உறைந்த இரத்தத்தை உடைக்கும் நொதிகளை proteolytic enzymes என்று கூறுவார்கள். அதாவது புரதங்களை உடைக்கும் (கரைக்கும்) நொதிகள். இரத்தம் உறைந்து விட்டது என்று தெரிந்த உடனயே இந்த நொதிகள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு விடும். மாரடைப்பில் முதலில் உருவாகிற குருதிக்கட்டு (blood clot) கூட முதலில் இந்த நொதிகளால் கரைக்கப்பட்டு விடும். மாரடைப்பு தோன்றுவதற்கு முன்பு பல அறிகுறிகள் தோன்றும். அதில் முதல் அறிகுறி, சிறிது தூரம் நடந்தால் கூட அதிகமாக வியர்க்கும், இதயம் படபடவென்று அடித்துகொள்ளும். இடது கையில் வலி தோன்றும். இதில் கண்டிப்பாக சிறிதளவில் குருதிக்கட்டு தோன்றி நொதிகளால் கரைக்கப்பட்டிருக்கும். இதை நாம் அலட்சியம் செய்யும் போது தான் அதற்கடுத்ததாக உருவாகிற குருதிக்கட்டு இன்னும் வலிமையானதாக  தோன்றும். நமக்கு எவ்வளவவு மனஅழுத்தம் இருக்கிறதோ அதே அளவு மிகவும் வலிமையான மாரடைப்பு வருவதற்க்காண வாய்ப்புகள் மிக அதிகம். குருதிக்கட்டு சிறிதாக இருக்கும் போது உடம்பிலுள்ள நொதிகளே கரைத்துவிடும். ஆனா குருதிக்கட்டு இன்னும் வலிமையானதாக மாறும்பொழுது உடம்பிற்கு நொதிகளை உற்பத்தி செய்ய நேரம் போதாது. இதனால் தான் இந்த நொதிகளை தூண்டி விட்டு உற்பத்தி செய்யக்கூடிய ஒரு புதிய நொதியை உள்ளே செலுத்துவார்கள் மருத்துவர்கள். அந்த புதிதாய் செலுத்தப்பட்ட நொதிகள் ஸ்ட்ரேப்டோகைநேஸ் அல்லது யூரோகைநேஸ் வகைகளாக இருக்கும். இதன் வேலை நமது உடம்பில் உள்ள நொதிகளை தூண்டி விடுவதுதான். சட்டில இருந்தா தானே அகப்பைல வரும்கிற மாதிரி, நமது உடம்பு ஆரோக்கியமாக இருந்தால் தானே எதிர்பாராமல் மாரடைப்பு வந்தால் கூட காப்பாற்ற முடியும். உடல் பருமனாக இருப்பவர்கள் சத்து குறைவாக சாப்பிட்டு உடல் எடையை இழக்க வேண்டாம். அதனால் ஆரோக்கியத்தையும் இழக்க நேரிடும். அதே மாதிரி உடல் இளைத்தவர்கள் உடம்பை அதே மாதிரி வைத்துகொள்ளவும் சரியாக சாப்பிடாமல் இருக்க வேண்டாம். உடம்பு ஆரோக்கியமாக இருந்தால் தான் நோய் வந்தால் கூட மருத்துவம் செய்ய இயலும். நல்லா சாப்பிடுங்க நல்லா வேலைய பாருங்க. தினமும் குறைந்தபட்சம் இரண்டு கிலோமீட்டர் நடங்க. மாரடைப்பு வராமல் இருக்க மனஅழுத்தம் இல்லாமல் இருப்பது ஒரு முக்கியமான காரணி. கோவம் வந்தா காமிச்சுடுங்க பிறகு அத பத்தி மறந்துடுங்க. வேலையா  இல்ல உயரதிகாரியா, இருக்கவே இருக்கு விளையாட்டு. நல்லா விளையாடினீங்கன்னா மனஅழுத்தம் முழுக்க குறைந்து விடும். கோவத்த குறைக்கிறேன்னு டிவியோ இல்ல கம்ப்யூட்டரோ பாக்காதீங்க அது இன்னும் அழுத்தத்தை அதிகரிக்ககூடும். நல்லா தூங்கி நல்லா சாப்பிட்டாலே மாரடைப்பு கண்டிப்பாக வராது.

புதன், 9 அக்டோபர், 2013

மாரடைப்பு - இரத்தம் உறைதல்

மாரடைப்பில் உறைந்த இரத்தம் தான் முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது. சாதரணமாக இரத்தம் உறைதல் நம்ம உடம்புக்கு தேவையான ஒன்று. ஒரு காயம் ஏற்ப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம், இந்த காயம் மூலமாக நெறைய இரத்தம் வெளியேறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இரத்தம் உறைகிறது. இரத்தம் உறைவதற்கு முக்கியமான தேவை ஆக்ஸிஜென். எதன் கூடவும் கூட்டு சேராமல் ஆக்ஸிஜென் தனியாக இருக்கணும். நம்ம சுத்தி இருக்கிற வளிமண்டலத்தில ஆக்ஸிஜென் அப்படி தான் இருக்கு. அதுனால காயம் பட்ட உடனே வளிமண்டலத்தில இருக்கிற ஆக்ஸிஜென் இரத்தம் உறைவதை ஆரம்பித்து வைக்கிறது. இந்த ஆக்ஸிஜனை  ப்ளேட்லட் (platelet) என்ற ஒரு “செல்” கண்டுணர்ந்து துரோம்பின் (thrombin) என்ற ஒரு புரதத்தை வெளியேற்றுகிறது. துரோம்பின் என்ற புரதம் பைப்ரின் என்ற புரதத்தை உருவாக்குவதன் மூலமாக ஒரு வலை ஒன்றை உருவாக்குகிறது. எப்படி வலைகளில் மீன் சிக்குகிறதோ அதேமாதிரி இரத்தத்திலுள்ள அனைத்து செல்களும் சிக்கி விடும். இந்த வலை காயம் உள்ள இடத்தில் உருவாகும். இந்த வலைல சிவப்பு இரத்த அணுக்களும் இருப்பதினால் தான் உறைந்த இரத்தம் சிவப்பாக இருக்கும். இதுல முக்கியமா கவனிக்க வேண்டியது என்னன்னா ஆக்ஸிஜென் தனியாக இருக்கணும், எந்த வேறு அணுவோடவும் சேர்ந்து இருக்க கூடாது. இதன் காரணமாகவே இரத்தத்தில் ஆக்ஸிஜென் எப்பொழுதுமே ஹீமோக்ளோபின் என்ற புரதத்தின் கூடவே இருக்கும். ஆக்ஸிஜெனின் தேவை எங்கு இருக்கிறதோ அங்க போய் கார்பன் டையாக்சைட் வாங்கிகிட்டு ஆக்ஸிஜெனை குடுத்து விட்டு வரும். இப்போ ஆக்ஸிஜென் புரதத்தின் கூட சேர்ந்து இருக்காமல் தனியாக இருந்தது என்றால் என்ன ஆகும்? இரத்தம் நாளங்களுக்கு உள்ளேயே உறைந்து விடும். அப்போ எந்த இடத்துக்கும் இரத்தம் போகாது. இது தாங்க இயற்கையின் விளையாட்டு. 

இதய நாளத்தில் உறைந்த இரத்தம் 

இப்ப மாரடைப்பில எப்படி இந்த இரத்தம் உறையுதுன்னு பாக்கறீங்களா? இந்த இடத்துல முக்கியமான காரணியாக வருவது மனஅழுத்தம். வேலைப்பளுவினால், அதிக துக்கத்தினால் மற்றும் வேறு சில காரங்களினாலும் வரும் இந்த மனஅழுத்தம்தான் மாரடைப்பிற்கு முக்கியமான காரணியாகி விடுகிறது. தேவையல்லாத பதட்டம் கூட ஒரு சில நேரங்களில் காரணியாக அமைந்து விடுகிறது. இந்த மனஅழுத்தம் நெறைய எதிர்செயல் செய்யும் மூலக்கூறுகளை இரத்தத்தில் உருவாக்கி விடுகிறது. இதனால் ஆக்ஸிஜென் இல்லாமலேயே இந்த மூலகூற்றின் காரணமாக துரோம்பின் வெளியேறிவிடும். துரோம்பின் வெளியேறினால், இரத்தம் உறைய ஆரம்பிக்கும். இதனால் இதயதிற்க்கான நாளங்களில் இரத்தம் செல்லாது. இதயத்திற்கு இரத்தம் செல்ல வில்லை எனும்போது இதயம் சிறிது சிறிதாக செயல் இழக்க ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில், இதயம் இயங்காமலே போய்விடும். இதுதான் மாரடைப்பு.  இதனால் தான் மனதை எப்பொழுதுமே சந்தோஷமாக வைத்துகொள்ள சொல்கிறார்கள், மனஅழுத்தம் உருவாகாமல் தடுத்தால், மாரடைப்பை தடுத்து விடலாம்.

திங்கள், 7 அக்டோபர், 2013

மார(கொழுப்ப)டைப்பு

மாரடைப்பு இருதயத்திலுள்ள நாளங்களில் இரத்தம் உறைவதால் வருதுன்னு சொல்றீங்க, சரி இங்க கொழுப்பு, அதுவும் கெட்ட கொழுப்பு எப்படி காரணமாகும்ன்னு சந்தேகம் வருதா? இத பத்தி விரிவா தெரிஞ்சிக்கணும்னா நம்ம முதல்ல சிறிது மனித உடம்ப பத்தி தெரிஞ்சிக்குவோம். நம்ம எல்லாத்துக்கும் தெரிஞ்ச ஒன்னு என்னன்னா “செல்”தான் எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படை. ஒரு செல் உயிரியான பாக்டீரியா முதல் உலகிலேயே பெரிய உயிரினமான நீலத்திமிங்கிலம் வரைக்கும் இது ஒன்னு தான். இதுல ஒரு செல் உயிரி பத்தி பிரச்னை இல்ல, இந்த பல செல் உயிரி இருக்கு பாருங்களேன், அதுக்குள்ள இருக்கிற ஒவ்வொரு “செல்”லும் ஒரு உயிர். நம்ம சாப்படற சாப்பாடு ஜீரணம் ஆகி, உடம்பில இருக்கிற ஒவ்வொரு “செல்”லையும் சேரனும். இதுக்கு தான் இரத்தமும் இரத்த நாளங்களும். இந்த இரத்தத்த ஒவ்வொரு இடமாக அனுப்ப தான் இதயம் துடிச்சுகிட்டு இருக்கு. இரத்த நாளங்களிலும் இந்த “செல்” தான் இருக்கு. இத எப்படி புரிஞ்சிக்கலம்னா “கால்வாய்”ய மனசுல நெனச்சுக்குங்க. கால்வாய்ல வர்ற தண்ணி தான் வயலுக்கு பாயுது. இப்போ கால்வாய் நடுவுல ஓடற தண்ணி, இரத்தம். கால்வாய் ஓரமா முண்டுக்கல்லு வச்சு பார்டர் குடுத்து இருப்போம்ல அது தான் “செல்”லு. எப்படி கால்வாய்ல போற தண்ணிய திசை மாறாம இந்த முண்டுகல்லு எல்லாம் உதவுதோ, அதே மாதிரி நம்ம ஒடம்புல எந்த இடத்துக்கு எல்லாம் இரத்தம் போகணுமோ அந்த இடத்துக்கு எல்லாம் இந்த நாளங்கள் போகும். சரி, முண்டுகல்லு மேல சிறிது சிறிதா மணல் மேட ஆரம்பிச்சதுனா என்ன ஆகும்? தண்ணி போகிற இடம் குறையும். நீரோட்டம் அதிகமாகும். இப்பிடியே ஒரு ஊருல இருக்கிற குப்பை, பிளாஸ்டிக் எல்லாத்தையும் கால்வாயில ஒரு இடத்துல கொட்டுனோம்னா, கால்வாய்ல அந்த ஒரு இடத்துல மட்டும் கால்வாயோட அகலம் கம்மி ஆகிட்டே வரும். அப்ப பாசனத்துக்கு நீர் கிடைக்காது, ஆனா அகலம் கம்மியான இடத்துல நீரோட்டம் அதிகரிக்கும். கால்வாய்ல வருகின்ற மிச்ச எச்சங்களும் இருக்கிற பாதையை அடைத்துக்கொண்டு தண்ணீர் செல்ல விடாது. பயிர் நாசம் ஆகிவிடும். இத அப்படியே நம்ம உடம்புல பொருத்தி பாருங்க.

(இரத்த நாளம் கொழுப்பு அடைக்கும் முன், கொழுப்பு அடைத்த பின்)  
(image courtesy: http://www.webmd.com)

கால்வாய் - இரத்த நாளம்;
முண்டுகல்லு – செல்;
மணல் மேடுறது – கொழுப்பு படர்வது;
குப்பை – தேவை இல்லாத இடத்துல கொழுப்பு குமிதல்;
மிச்ச எச்சம் – இரத்தம் உறைதல்;

இப்படி இரத்தம் உறையறதுனால மேற்கொண்டு இரத்தம் போகாது. புரியுது புரியுது, அதான் மெலிதான தேகம் உள்ளவங்களுக்கு எப்படி கொழுப்பு படரும்ன்னு கேக்கறீங்க... இந்த கெட்ட கொழுப்புக்கு மெலிதான பருமன்னான தேகம் அப்டின்னு வித்தியாசம் இல்லேங்க. யாரா இருந்தாலும் அழுத்தம் (உடல் மற்றும் மன) அதிகமானாலும் இந்த விதமான கொழுப்போட அளவு அதிகரிக்கும். நம்ம குடுக்குற அழுத்ததினால எல்லா “செல்”லுக்கும் அதிகமான சக்தி தேவைப்படும். தூங்காம, சரியா சாப்பிடாம, தேவை இல்லாத பழக்கங்கினால் “செல்”லுக்கு தொடர்ந்து இரத்தம் தேவைப்பட்டுகிட்டே இருக்கும். ஒரு இயந்திரம் தொடர்ந்து ஓடிகிட்டே இருந்துச்சுன்னா பழுதாக ஆரம்பிக்கும். இதே மாதிரி தான், தொடர்ந்து இரத்தம் கொண்டு போறதினால இரத்த நாளங்களும் பழுதாக ஆரம்பிக்கும். அப்ப இந்த கெட்ட கொழுப்பு இந்த செல்கள் மேல படிய ஆரம்பிக்கும். அப்புறம் என்ன கால்வாய்ல தண்ணி போகாது. மெலிதான தேகமா இருந்தா என்ன பருமனான தேகமா இருந்தா என்ன, உடலில் அல்லது மனதில் அழுத்தம் அதிகரிக்கும் போது கெட்ட கொழுப்பு அதிகமாகும், நாளங்களில் படியும். இந்த நிலைமைக்கு பெயர் தமனி தடிப்பு (Atherosclerosis). அதுனால பருமனா இருக்குறவங்களுக்கு எல்லாம் கெட்ட கொழுப்பு படிஞ்சு மாரடைப்பு வரும்னு  இல்ல மெலிதாக இருக்குறவங்களுக்கு மாரடைப்பு வராதுன்னு சொல்ல முடியாது. யாரு யாருக்கெல்லாம் அழுத்தம் அதிகமாக இருக்கோ அவங்களுக்கு எல்லாம் மாரடைப்பு வருவதற்க்கான சாத்தியக்கூறுகள் அதிகம். எல்லாரும் தூங்கவேண்டிய நேரத்துல நல்ல தூங்குங்க, நல்லா சாப்பிடுங்க, கெட்ட பழக்கம் இல்லாம நல்லா ஜாலியா இருங்க, மாரடைப்பு கண்டிப்பா வராது.

புதன், 2 அக்டோபர், 2013

மாரடைப்பு - ஒரு முன்னுரை

சிகரெட் புகையினால் கான்சர் மட்டும் தான் வருதுன்னு நினைசோம்னா அது ரொம்ப தப்பு. இரத்தக்கொதிப்பு, மலட்டுத்தன்மை (இருபாலருக்கும் தான்), வயிற்றுப்புண், ஒவ்வாமை, தோல் மற்றும் முகம் சுருங்குதல், இவங்களுக்கு எல்லாம் கொம்பன் ஒருத்தன் இருக்கான், மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்). இந்த உலகத்துல செத்தவங்க கணக்க எடுத்து பார்த்தோம்னா அதுல அதிகமான சாவு (30%) இதயம் மற்றும் இதயம் சார்ந்த நாளங்களிள் தான் வருது (cardiovascular diseases) புகைப்பதினால் தான் மாரடைப்பு வருகிறது என்றில்லை, ஆனா புகைப்பழக்கம் முக்கியமான காரணியாக இங்க இருக்கு. நெறைய பேர் நெனச்சுகிட்டு இருக்குற மாதிரி உடல் பருமனானவர்களுக்கு மட்டும் தான் மாரடைப்பு வரும் என்றில்லை. உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பவர்களுக்கும் கூட மாரடைப்பு வரும். மாரடைப்புக்கான முக்கியமான காரணிகளில் புகைப்பழக்கம், மதுப்பழக்கம், மன அழுத்தம், சாப்பிடும் வழக்கம், தூக்கமின்மை போன்றவை முக்கியமானது. நம்ம உடம்புல இரண்டு வகையான கொழுப்பு இருக்கு. HDL மற்றும் LDL. நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்புன்னு வச்சுகுவோமே. நம்ம சாப்படற சாப்பாடு செரிமானம் ஆகி நல்ல கொழுப்பா மாறனும். சாப்படற சாப்பாடுல அதிக கொழுப்பு இருந்தாலோ, இல்ல உடலுக்கு மிக அழுத்தம் கொடுத்தாலோ, கெட்ட கொழுப்பு ஜாஸ்தியாக ஆரம்பிக்கும்.


(image courtesy: http://www.wonderwhizkids.com)
மேலே உள்ள படத்த பாருங்க. நம்ம இரத்த நாளங்களில் இப்பிடி தான் இருக்கும். அத ஒரு சின்ன குழாய் மாதிரி நெனச்சுக்கொங்க. இந்த குழாய் மூலமாக இரத்தம் உடலில் உள்ள அணைத்து இடங்களுக்கும் சென்று கொண்டு இருக்கிறது. மேல நம்ம இதயத்திலிருந்து இரத்தம் கீழே வருவதற்கு எதுவுமே செய்ய வேண்டாம். புவி ஈர்ப்பு விசையே எல்லாமே செய்து விடும். ஆனா கிழே இருந்து மறுபடியும் இதயத்திற்கு வரணும்னா ஒரு அழுத்தம் வேணும்ல, நம்ம வீட்டுல கிணத்துல இருந்து மாடி டாங்க்க்கு தண்ணி எத்தனும்னா மோட்டார் போடுறோம்ல, அதே மாதிரி இதயமும் ஒரு மோட்டார் போல செயல் படுது. தேவையல்லாத பழக்கங்களினால இந்த கெட்ட கொழுப்பு இரத்த நாளங்களில் ஒரு லேயரா படிஞ்சுடுது. இப்ப என்ன ஆகும் இரத்தம் போகற இடம் கம்மி ஆகிடும். தண்ணி வர்ற குழாய்ல சிறிது அழுத்தம் கொடுத்தோம்னா என்ன ஆகும், தண்ணி வெளியேர்ற வேகம் கூடும்ல, அதே தான் இங்க இரத்த நாளன்கள்ல நடக்கும். இதுக்கு பெயர் தாங்க இரத்தக்கொதிப்பு. சரி மாரடைப்புன்னு சொல்லிக்கிட்டு இவன் என்னடா இரத்தக்கொதிப்ப பற்றி பேசுறான்னு பாக்கறீங்களா, இரண்டுக்கும் மிக நெருங்கின தொடர்பு உண்டு. உடம்பிலுள்ள அணைத்து நாளங்களில் கொழுப்பு படர்வதால் இரத்தக்கொதிப்பு வரும், ஆனா இதே இதயம் சம்பந்தப்பட்ட நாளங்களில் படரும்போழுது மாரடைப்பு வருவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். இதயத்திற்கு இரத்தம் தரும் நாளங்களில் கொழுப்பு படரும் பொழுது, நமது தேவை இல்லாத பழக்கங்களினால் இரத்தம் நாளத்திற்கு உள்ளயே உறைய ஆரம்பிக்கும். இந்த உறைந்த இரத்தம் நாளத்தை அடைத்துக்கொண்டு இரத்தம் மேற்கொண்டு செல்ல விடாமல் தடுக்கும். இதனால் இதயத்திற்கு இரத்தம் செல்லாது, முதலில் இதயம் சரிவர இயங்காது, பின்னர் இயங்காமலே போய்விடும். இதுதான் மாரடைப்பு. மாரடைப்பின் முதல் அறிகுறி, இடது கையில் வலி ஏற்படும். எப்பொழுது நெஞ்சில் எரிச்சலும், அளவுக்கு அதிகமான வியர்வை வெளியேற்றம்,  இடது கையில் வலியும் ஏற்படுகிறதோ உடனே ஒரு மருத்துவரை சென்று பாருங்கள், மாரடைப்பின் அறிகுறியாக கூட இருக்கலாம்.