திங்கள், 3 பிப்ரவரி, 2014

மருத்துவத்தில் உயிரி தொழில்நுட்பவியல் – 2

முன் பகுதியில் மாரடைப்பை உதாரணமாக எடுத்துக்கொண்டதின் காரணம் மனித சமுதாயத்தில் இருதயம் மற்றும் அதன் சார்ந்த நோய்களால் தான் அதிக மக்கள் உயிரிழக்கின்றனர்/பாதிக்கப் படுகின்றனர் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன (http://www.who.int/mediacentre/factsheets/fs317/en/index.html). அதை தொடர்ந்து புற்றுநோய், டயாபடீஸ் (சர்க்கரை நோய்) மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரிசைப்படுகின்றன.

“முகேஷ்”, சில காலம் முன்பு வரை இந்த பெயர் சொன்னால் முகேஷ் அம்பானி தான் ஞாபாகத்திற்கு வருவார். தற்பொழுது வரும் முகேஷ் ரொம்ப முக்கியமானவர். அவரை போன்று இன்னும் பல பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருகின்றனர். பாதி பேருக்கு தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியாது, தெரியாமலே போய்விடுகிறது. இதில் வறுமை கோட்டிற்கு கீழாக உள்ளவர்கள் அதிகம். கரையான் புற்று போல சிறிதாக ஆரம்பிக்கிற கட்டி வளர்ந்து வளர்ந்து பெரியதாக ஆகிவிடும். இதன் வளர்ச்சி மிகவும் வேகமாக இருக்கும், இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் புற்றுநோய் கட்டிக்கே சென்று விடும், இது போக அதிலிருந்து வெளியேறும் சில கெமிக்கல்கள் நமது உடம்பில் வலி ஏற்படுத்தும். இந்த கட்டி ஒரு இடத்தில் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடுவதற்கான வாய்ப்பு உண்டு (எந்த வகையான புற்றுநோய் என்பதை பொறுத்து). சில காலம் கவனிக்காமல் விட்டால் இது எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்து விடும். பிறகு சிகிச்சை செய்வது கடினம்.

(அதிகமாக தாக்கக்கூடிய புற்றுநோய்க்கள் - Image Courtesy : www.cancer.gov)

ஆண்கள் அதிகமாக நுரையீரல் சம்பந்தப்பட்ட புற்றுநோயால் பாதிக்கபடுகின்றனர், பெண்கள் மார்பக புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் உபயோகிப்பது தான் 80% நுரையீரல் சம்பந்தப்பட்ட புற்றுநோய்க்களுக்கு காரணம். பாஸிவ் சுமொகர்ஸ் - புகை புடிப்பவர்கள் வெளிவிடும் புகையை சுவாசிப்பவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருவதார்க்கான வாய்ப்புகள் அதிகம் (பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்). இது போக அடுப்பெரிக்கும் புகை, ஆஸ்பெஸ்டாஸ் கூரையில் கீழ் வாழ்பவர்கள்/வேலை செய்பவர்களுக்கும் வரக்கூடும். தொடர் இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், இருமும் போது இரத்தம் வருதல், சோர்வு, உணவை முழுங்க கஷ்டப்படுதல் போன்றவை நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்.


(Image Courtesy: www.tocancer.com)

மார்பகத்தில் புற்றுநோய் உண்டாவதற்கு பல காரணிகள் உண்டு, குழந்தைகளுக்கு குறைவான நாட்களே தாய்ப்பால் குடுப்பது, அதிகமாக கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வது, உடற்கட்டை காப்பதற்காக மாதவிடாய் நின்ற பின் ஹார்மோன் சிகிச்சை எடுத்துகொள்வது, அதிகமான வயதில் (35 வயதிற்கு மேல்) முதல் குழந்தை பெற்றுகொள்வது, மது அருந்துவது போன்றவை மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணிகள். மார்பகத்தில் கட்டி உருவாகுதல், சட்டென்று மார்பகத் தோலின் நிறம்/தொனி  மாறுவது, முலை காம்பில் சீழ்/இரத்தம்/நீர் வடிதல், அடிக்கடி மார்பகத்தில் வலி தோன்றுவது முதலியன மார்பக புற்றுநோயின் அறிகுறி.

(Image courtesy: www.cancer.gov)

இது எல்லாம் புள்ளிவிபரங்கள் சொல்பவை. ஆனால் இதை தவிர இன்னொரு முக்கியமான காரணி இருக்கு, எல்லா விதமான புற்றுநோய்களுக்கும் இது ஒரு முக்கியமான காரணி, மன அழுத்தம் (stress),  மன அழுத்தம் அதிகமாக அதிகமாக புற்றுநோய்க் கட்டி வெகு சீக்கிரமாகவே உருவாகும்/வளரும். பல பேர் சொல்லுவாங்க.. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லேயே அப்புறம் ஏன் கேன்சர் வந்திருக்குன்னு??? புற்றுநோய் வருவதற்கு எந்த கெட்ட பழக்கமும் அவசியம் இல்லை, மன அழுத்தம் மட்டுமே போதுமானது. இன்னும் சீக்கிரம் புரியணும்னா... வசூல்ராஜா MBBS படத்துல ஸாகீர்ன்னு ஒரு கதாபாத்திரம் வரும், அதுல கேன்சர் வந்ததுக்கு அப்புறம் ஸாகீர் சொல்லுவான், “எனக்கும் எல்லாம் (அனைத்து கெட்ட பழக்கம்) பண்ணனும்னு ஆசை இருக்கு, ஆனா ஃபேமிலி செட்டில் பண்ணிட்டு அப்புறம் எல்லாம் பண்ணலாம்னு பாத்தேன்னு..” இதுல என்ன ஒரு பிரச்சனைனா, கெட்ட பழக்கம் இருந்த கேன்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகம், மன அழுத்தம் இருந்தா கெட்ட பழக்கம் இருப்பவர்களை விட சீக்கிரம் வரும், இன்னும் பல பேருக்கு சின்ன வயசுலேயே கேன்சர் வரும், அவங்களுக்கு கெட்ட பழக்கமும் இருக்கும் மன அழுத்தமும் இருக்கும். மன அழுத்தம் எப்படி வேணும்னாலும் இருக்கலாம். ஆபீஸ்ல/வீட்ல/பயணத்தினால எங்க/எதுனால வேணும்னாலும் மன அழுத்தம் வரும். இந்த மன அழுத்தத்த குறைத்தாலே பாதி கேன்சர் நோயாளிங்க காணாமபோய்டுவாங்க.

புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதென்பது மனிதனுக்கு கொம்பு முளைப்பதை போல. பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் வெளியே இருந்து மனிதனுள் சென்று வியாதிகள் ஏற்படுத்தும், அதனால் அவைகளை மட்டும் வெளியேற்றுவது/கொல்வது சுலபம். குறைந்தபட்சம் வித்தியாசமாவது கண்டுபிடித்துவிடலாம். ஆனா இந்த புற்றுநோய் அப்படி இல்ல. ஏன்னா  புதிதாய் முளைத்த/முளைக்கின்ற கட்டி நம்ம ஒடம்புல இருந்தே உருவாகுது. இதனால புற்றுநோய்க்கு மருந்து குடுத்து கட்டில இருக்குற செல்களை கொல்ல முயற்ச்சிக்கும் பொழுது நம்ம உடம்புல இயல்பு நிலைல இருக்குற செல்களும் செத்து போகும். காரணம் இரண்டுமே ஒரே உடம்பில் உருவாகுற செல்கள் தானே. இது தான் இன்றைய ஆராய்ச்சியாளர்களுக்கு உள்ள மிகப்பெரிய சவால். சில வித்தியாசங்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அந்த வித்தியாசங்களை உபயோகப்படுத்தி மருந்து கண்டுபிடிக்கும் பொழுது சிகிச்சைக்கான செலவு மிகவும் அதிகமாகி விடுகிறது. செலவு அதிகரிக்கும் பொழுது ஏழைகளுக்கு சிகிச்சை என்பதே எட்டாமல் போய் விடுகிறது.


பயொடேக்னாலாஜி இங்க புற்றுநோய்க்கு சிகிச்சை மற்றும் குறைவான செலவில் சிகிச்சை என்ற இரண்டுக்கும் பாலம் அமைக்க தான் முயற்ச்சிகள் எடுத்துவருகிறது. பல நிலைகளில் சிகிச்சை ஆராயப்பட்டு வருகிறது, இயற்கை/கெமிக்கல் மருந்துகள், ஆன்டிபாடி தெரபி (antibody therapy), நானோ துகள்கள் (nanoparticles) போன்றவை ஆராயப்பட்டு வருகின்றன. தடுப்பு மருந்து கூட முயற்சி செய்யப்பட்டு வருகிறது. ஆராய்ச்சி வெற்றி அடைகிறதோ/இல்லையோ புற்றுநோயை சீக்கிரமே கண்டுபிடித்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும்.