செவ்வாய், 24 செப்டம்பர், 2013

உயிர் (எடுக்கும்) புகை - 2

சரி சிகரெட் புகைல கார்பன் மோனாக்சைட் மட்டும் தான் இருக்கான்னு கேள்வி வருதா?.. இல்லை. கார்பன் மோனாக்சைட் போக இன்னும் பல நச்சுப்பொருட்கள் சிகரெட் புகைல இருக்கு. கார்பன் மோனாக்சைட், ஹைட்ரோஜென் சயநைட் போன்றவை வாயு உருவிலும், பார்மால்டிஹைட் (பிரேதங்களை அழுக விடாமல் காக்கும் ரசாயனம்), பென்சீன் போன்றவை சிறு நுரைகளாகவும், தார், நிகோடின் போன்றவை சிறு துகள்களாகவும் இருக்கும். எனக்கு இப்போ ஒரு பழைய நண்பர் (சிகரெட் புகைப்பவர் தான்) சொன்னது ஞாபகம் வருது. ஒரு சிகரெட் புகைச்சா 12 நிமிஷம் ஆயுள் குறையுமாம், 15 நிமிஷம் சிரிச்சா 15 நிமிஷம் ஆயுள் கூடுமாம். அதுனால சிரிச்சிகிட்டே சிகரெட் புகைக்கலாமான்னு கேப்பாரு. அப்ப புகைப்பது தப்புன்னு தெரியும், ஆனா எதுனாலன்னு என்னால சரியா சொல்ல முடில. அந்த விஷயம் என்னனு சில காலமா தான் புரிஞ்சிச்சு. நாம என்ன தான் ஆர்கானிக் உயிரினமா இருந்தாலும், நமக்கும் இந்த ஆர்கானிக் ரசாயனத்துக்கும் ஆகவே ஆகாது. சிகரெட் புகைல இந்த ஆர்கானிக் பொருட்கள் நிறைய இருக்கு. அத விட முக்கியம் நிகோடின். சிகரெட் புகைப்பதினால் வரும் புற்றுநோய்க்கு முக்கியமான காரணம் இது. இத பத்தி தெரிஞ்சிக்கரத்துக்கு முன்னாடி, நம்ம உடம்புல என்ன நடக்குதுன்னு  தெரிஞ்சிக்குவோம். என்னதான் மனிதனனுக்கு ஆயுசு 60-80 வருடங்களாக இருந்தாலும் ஒரு செல்லுக்கான ஆயுசு 40-80 நாட்கள் தான். ஒரு செல்லுக்கான ஆயுசு முடிஞ்ச உடனே அது தற்கொலை பண்ணிக்கிட்டு செத்து போய்டும். அந்த இடத்துக்கு புது செல் வரும். எந்த செல் புது செல்ல உற்பத்தி பண்ணுதோ அதுக்கு பெயர் தான் ஸ்டெம் செல் (இதுக்கு ஆயுசு கொஞ்சம் ஜாஸ்தி). ஸ்டெம் செல்லோட வேலை என்னன்னா புது செல்ல உருவாக்குறது மட்டும் தான் (இராணி தேனீ மாதிரி). மிச்ச வேலை எல்லாம் இந்த புதிதாய் உருவாகற செல் தான் செய்யும். எப்படி ஒண்ணுமே செய்யலேன்னாலும் இராணி தேனீ இல்லேனா தேனீ கூட்டமே உருவாகாதோ அதே மாதிரி இந்த ஸ்டெம் செல் இல்லேனா ஒரு செல்லுமே புதுசா உருவாகாது. இது ஒரு தொடர் ஓட்டம். செல் சாகும் போது ஸ்டெம் செல் புதிதாய் செல்களை உருவாக்கும். இந்த புதிதாய் உருவாகுற செல் வேலை முடிஞ்ச உடனே தான் தற்கொலை பண்ணிக்கும்னு இல்ல, அதுக்கு வேலைப்பளு ஜாஸ்தி ஆனாலும் செத்துபோய்டும். நம்ம சாப்டுற சாப்பாடு, தூக்கமின்மை, மனஅழுத்தம் இது எல்லாமே செல்களோட வேலையை அதிகப்படுத்தும். இப்ப தான் நம்ம சரியா சாப்பிடுறதே இல்லையே, இரவு நேர கொண்டாட்டங்கள், தூக்கமின்மை, இதுலயே செல்களுக்கான பளு அதிகமாகி சீக்கிரம் தற்கொலை செய்துகொண்டிருக்கும். இது போக புகைப்பிடிப்பதினால் உள்ளே வரும் நச்சுப்பொருட்களையும் வெளியே அனுப்ப வேண்டிய வேலையை செய்யும்பொழுது செல்களுக்கான ஆயுசு மிகவும் குறைய தொடங்கும். இப்ப இந்த ஸ்டெம் செல்லுக்கு வேலை அதிமாக ஆரம்பிக்கும், ஏன்னா புதுசா நெறைய செல் வேணுமே... இல்லாட்டி உடம்புல எந்த வேலையும் சரியா நடக்காதே. இப்ப ஒரு உதாரணம், ஒரு கம்பெனில வெளி வருகின்ற பொருளோட தரம் மிக உயர்வா இருக்குனு வச்சுக்குவோம், அவங்க ஒரு மாசத்துல செய்ய வேண்டிய வேலைய அதே ஆட்களை வச்சுகிட்டு ஒரு வாரத்துல முடிக்க சொன்னா என்ன ஆகும்? வெளில வர பொருட்களோட தரம் மிக மிக குறைந்து விடும் இல்லையா. அந்த மாதிரி தான், இந்த ஸ்டெம் செல்லுக்கு வேலை அதிகமா வரும்போது புதிதாய் உருவாகற செல் எல்லாம் சரியா வேலை செய்யாது. இது கூட பரவால்ல. புதிதாய் உருவாகுற செல் மீண்டும் வளர ஆரம்பிச்சுட்டா? சரி ஒரு செருப்பு கம்பனியே வச்சுக்குவோமே. கம்பெனில செருப்பு செய்யுறாங்க, நாம கால்ல போட்டுகிட்டு நடக்குறோம். இப்ப இந்த செருப்பே புதுசா செருப்பு குட்டி போட ஆரம்பிச்சுதுன்னா என்ன ஆகும். செருப்போட எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாமல் உயர்ந்துகிட்டே போகும்ல. இந்த நிலைமைக்கு பேரு தான் கான்சர் - புற்றுநோய். கம்பெனி – ஸ்டெம் செல், செருப்பு – புதிதாய் உருவாகுற செல். இங்க எங்க புகைப்பழக்கதினால இந்த பிரச்னை வருதுன்னு கேக்கறீங்களா... இந்த நிகோடின்கற வேதிப்போருளோட வேலையே செல்களை சரியா வேலை செய்ய விடாம சாவடிக்கறதுதான். நிகோடினோட அளவு ஜாஸ்தியாக ஜாஸ்தியாக அதிகமா செல்கள் எல்லாம் சாக ஆரம்பிக்கும். அப்புறம் என்ன அடுத்த ஸ்டேஜ் தான் – கான்சர். சிகரெட் புடிக்கறவன் சாவறான் சரி, ஆனா பக்கத்துல இருக்கறவன் ஏன் சாவனும்? ஒருத்தன் 10 நிமிஷம் புகைக்கிறான் வச்சுக்குவோமே, 10  நிமிஷம் முழுக்க புகையை இழுத்துக்கிட்டேவா இருக்க போறான், அவன் இழுக்க போறதோ 3-4 நிமிஷம் தான். அப்ப மிச்ச  நிமிஷ புகை? ஆமா ஆமா, காத்துல கலக்கும், பக்கத்துல இருக்கறவங்கள வந்து சேரும், அத சுவாசிக்கிற பக்கத்துல இருக்கறவங்களுக்கும் கான்சர் வரும். ஆராய்ச்சிகள் என்ன சொல்லுதுனா சிகரெட் புகைப்பவர்களை விட சிகரெட் புகைப்பவர்கள் பக்கத்துல இருக்கரவகளுக்கு தான் கான்சர் வருவதாற்கான வாய்ப்புகள் அதிகம்னு சொல்றாங்க... அதுனால மறுபடியும் சொல்றேன், புகைப்பவன் எக்கேடோ கெட்டுபோறான், நண்பனா இருந்தாலும் பக்கத்துலயே நிக்காதீங்க.... ஓடிடுங்க... கான்சர் நம்மள துரத்திக்கிட்டே வந்துகிட்டு இருக்கும்...

உயிர் (எடுக்கும்) புகை

origin of life – உயிர் எப்படி உருவாகிற்று...? இந்த கேள்வி இப்போ எதுக்குன்னு கேக்குறீங்களா? நானும் எழுதனும்ல அதுக்கு தான் இப்படி ஆரம்பிக்கிறேன். உயிர் எப்படி உருவாச்சுனு தெரிஞ்சா தான் புகைப்பழக்கதினாலே எப்படி பாதிக்கப்படுறோம்னு தெரியும். பல பேர் பல தியரிகளை அடுக்கியிருக்காங்க. ஆனா ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்லமுடியும்ங்க. முதமுதல்ல நீருக்குள்ள தாங்க உயிர் உருவாச்சு. உயிர் தோன்ற முக்கியமான தேவை நான்கு அணுக்கள் தான். கார்பன், ஹைட்ரோஜன், ஆக்சிஜன் மற்றும் நைட்ரோஜன். முதல் உயிர் உருவாகும்போது இந்த உலகத்திலே அது மட்டும் தாங்க உயிர். அது கண்டிப்பாக ஒரு செல் உயிரியாகதான் இருந்திருக்க வேண்டும். அதற்கு பின் பல மாற்றங்கள். மரபணு மாற்றங்கள் (mutations) அந்த ஒரு செல் உயிரியிருந்து பல உயிர்கள் தோன்றின. பிறகு நீரிலிருந்து நிலத்திற்கு தன்னை மாற்றிக்கொண்டது. இப்போ நம்ம என்ன நினைக்கிரோம்ன நம்ம காற்றை சுவாசிக்கிறோம்னு என்று. ஆனால் நம்ம உடம்புல எந்த செல்லும் அப்படியே காற்றில் இருக்குற ஆக்சிஜனை உபயோகப்படுத்த முடியாது. நம்ம செல்லுகுள்ள போகனும்னா ஆக்சிஜன் கண்டிப்பாக நீரில் கரைந்து இருக்கணும். இதுதான் உயிர் முதலில் உருவானதிலிருந்து தற்பொழுது வரைக்கும் நடக்கின்ற முறை. இங்க தண்ணீருக்கு பதிலா இரத்தம். நம்ம சுவாசிச்ச உடனே முதல்ல ஆக்சிஜன் இரத்தத்தில் இருக்கும் ஹீமோக்லோபின் (hemoglobin) என்ற புரதத்தின் கூட சேர்ந்துக்கும். நம்ம இரத்தம் சிகப்பா இருக்க காரணமே இந்த ஹீமோக்ளோபின் புரதம் தாங்க. பிறகு நம்ம  இதயம் துடிக்கும் பொழுது தேவையான இடத்திற்கு இரத்தம் கொண்டு செல்லப்படுகிறது. தேவையான இடத்தில் ஆக்சிஜனை கொடுத்துட்டு, அங்கே உள்ள கார்பன் டைஆக்சைடை எடுத்துகிட்டு நுரையீராலுக்கு கொண்டுவந்து சேர்க்கும் (பண்டமாற்று முறை தான்). இந்த சுழற்சி நிதமும் நடந்துகொண்டு தாங்க இருக்கும். இப்படி தாங்க நம்ம சுவாசிக்கிறேம். இங்கே நாம இன்னொரு விஷயத்த கவனிக்கணும், இது நாம் தினமும் பார்க்கறதுதான். கார்பன் மோனாக்சைட். இது சிகரெட் புகை, சரியாக பழுதுநீக்காமல் உபயோகிக்கப்படும் வாகனத்தின் (இருசக்கர வாகனமும் அடக்கம்) புகை மற்றும் பிளாஸ்டிக், தெர்மொகோல் போன்ற பொருட்களை எரிக்கும் புகையிலும் அதிகமாக இருக்கும். ஹீமோக்லோபின் புரத்திற்கு ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடை விட கார்பன் மோனாக்சைட் மேல் பிரியம் ஜாஸ்தி (கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி வச்சுப்பாங்கள்ல அது மாதிரி). ஒரு தடவ அவங்க சேர்ந்துட்டாங்கனா அவங்கள பிரிக்கவே முடியாது. அப்ப அந்த புரதம் இருந்தும் இல்லாத மாதிரிதான். காற்று மாசுபடுகின்றதனால உருவாகும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. இதில் தம் அடிக்கறவங்க விடுற புகையினால, அடிக்கறவங்க மட்டுமில்ல அவரை சுற்றி உள்ள அனைவரையும் பாதிக்கும். இதில் மிகவும் மோசமான செயல் என்னன்னா ஒரு சில பேர் குழந்தைகளோட தம் அடிக்க வருவாங்க. அப்ப அவங்ககிட்டே கெட்ட வார்த்தைல திட்டனும் போல இருக்கும். குழந்தைகளின் நுரையீரல் மற்றும் இதர பாகங்கள் மிகவும் மென்மையாக இருக்கும். குழந்தைகள் சிகரெட் புகையை சுவாசிச்சால் சீக்கிரம் ஆஸ்த்மா போன்ற வியாதிகள் கண்டிப்பாக வரும். இதுனால நான் சொல்றது என்னன்னா எங்கயாவது எந்த _____அவது புகை பிடிச்சான்னா கண்டிப்பாக அந்த இடத்துல இருக்காதீங்க. அதுலயும் பெண்கள் கண்டிப்பாக இருக்க வேண்டாம் (குழந்தைகள் மற்றும் கர்பப்பையில் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன). புற்றுநோய், ஆஸ்த்மா, பல சுவாசகோளாறுகள் வருவதார்கான வாய்புகள் மிக அதிகம். உஷார்!!!